அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேற்று முன்தினம் நீதிபதி எழுப்பிய 12 கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில் தரப்பட்டது.
அதில், ‘போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 43,508 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிக்கு வரவில்லை என்றால் சம்பளம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.
அப்போது நீதிபதி, ‘ மாணவர்களின் கல்வி குறித்துதான் இந்த நீதிமன்றம் அதிகளவில் அக்கறை கொண்டுள்ளது. இந்த வழக்கை நாளை தள்ளி வைக்கிறேன். அப்போது, ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதிய சம்பளம் பிடித்தம் தொடர்பான, தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.