10 நாள் விடுமுறை நிறைவு : நாளை பள்ளிகள் திறப்பு

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அன்றே, மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், முதல் பருவத்துக்கான காலாண்டு தேர்வு, செப்., 22ல் முடிந்தது. 23 முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று, காந்தி ஜெயந்தி விடுமுறை. 10 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றே இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், குழந்தைகள். எனவே, நாளை பள்ளிகள் திறந்ததும், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் மாணவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட உள்ளது. மேலும், டெங்கு அதிக அளவில் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. விடுதிகள், பள்ளி வளாகங்களில் குடிநீர் தொட்டிகள், நீர் தேக்கி வைக்கப்படும் இடங்களை, சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். கல்வி நிறுவன வளாகங்களில், கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில், தேங்கி கிடக்கும் குப்பை கூளங்கள், உடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில், உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top