தீபாவளிக்கு முன் புதிய ஊதியம் வேண்டும் ‘ஜாக்டோ – ஜியோ கிராப்’ வலியுறுத்தல்

‘தீபாவளி பண்டிகைக்கு முன், புதிய ஊதியத்தை அறிவிக்க வேண்டும்’ என, முதல்வர் பழனிசாமியை சந்தித்து,
‘ஜாக்டோ – ஜியோ கிராப்’ அமைப்பினர் வலியுறுத்தினர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின், ‘ஜாக்டோ – ஜியோ’ கூட்டமைப்பினர், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவால், போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, செப்., 27ல், தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதன்படி, விரைவில் ஊதிய உயர்வை அறிவிக்க உள்ளது.அரசுக்கு ஆதரவான, ‘ஜாக்டோ – ஜியோ கிராப்’ அமைப்பின் நிர்வாகிகள் சண்முகராஜன், இளங்கோவன், கணேசன் உள்ளிட்டோர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர்.

இது குறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், இளங்கோவன் கூறியதாவது: முதல்வர் அறிவித்தபடி, ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்த குழுவிடம், தமிழக அரசு அறிக்கை பெற்றுள்ளது. இதற்காக, முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். ஊதியக்குழு பரிந்துரைப்படி, இந்த மாதம் முதல் புதிய ஊதியம் வழங்க வேண்டும்; இதற்கான அறிவிப்பை, தீபாவளிக்கு முன் வெளியிட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம். தாமதமானால் இடைக்கால நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என, மனு கொடுத்துஉள்ளோம்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, கட்டாயம் ரத்து செய்ய வேண்டும். நவ.,3௦க்குள், இதுகுறித்த ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் வலியுறுத்தி உள்ளோம்.

மேலும், ‘ஜாக்டோ – ஜியோ கிராப்’ அமைப்பு சார்பில், சி.பி.எஸ்., என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஒழிக்க, மாநாடு நடத்த உள்ளோம். இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top