டிச.12-இல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு முடிவு

மயிலாடுதுறை: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.12- ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு உயர்மட்டக் குழுக் கூட்டம், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கு. பாலசுப்ரமணியன் சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

8-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை 1.1. 2006 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் டிச. 12-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

முன்னதாக, சங்கத்தின் மாநில அமைப்பாளர் பி.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆர். குப்புசாமி, கோ. சீனிவாசன், விஜயன், தொல்காப்பியன், கு. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top