ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். சென்னை எழிலகம் வளாகத்தில் 5-வது நாளாக நேற்று போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தெரிவித்தபடி போராட்டத்தை ஒத்திவைத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் போராட்டத்துக்கு நாங்கள் காரணம் அல்ல, அரசு தான் முழு காரணம். அரசு எங்களை 14 ஆண்டுகாலம் அலைக்கழித்து இருக்கிறது என்று தெரிவித்தனர்.

இறுதியாக, நீங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள், உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் துணைபுரிகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். போராட்டத்தை நிறுத்த முடியாது என்று நிர்வாகிகள் கூறினர்.

முதல் வெற்றி

தமிழக அரசின் தலைமைச் செயலாளரை 21-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக சொல்லி, அவரிடம் உங்களுடைய கோரிக்கை சம்பந்தமாக தமிழக அரசு என்ன முடிவு எடுத்து இருக்கிறது? என்று கேட்போம். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு எங்களுடைய நிர்வாகிகள், போராட்டத்தை கைவிட முடியாது. 21-ந்தேதி தலைமைச் செயலாளர் கோர்ட்டில் ஆஜராகி என்ன சொல்கிறார் என்று தெரியும் வரை கோர்ட்டு மீது வைத்துள்ள நம்பிக்கையின்படி, தற்காலிகமாக எங்களுடைய போராட்டத்தை நிறுத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர். அந்த அடிப்படையில் நாங்கள் போராட்டத்தை 21-ந் தேதி வரை ஒத்திவைத்து பணிக்கு செல்கிறோம். எங்கள் கோரிக்கைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.

உயர்மட்டக்குழு கூடுகிறது

இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூடுகிறது. அதில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என்பது குறித்து முடிவு எடுப்போம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது.

அவைகளை அந்தந்த துறை வாபஸ் பெறுவது தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top