இன்று முதல் வேளாண் படிப்பு இறுதிக் கட்ட கலந்தாய்வு துவக்கம்

வேளாண் படிப்புகளுக்கு, இறுதிக் கட்ட கலந்தாய்வு, கோவையில் இன்று துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு மற்றும், 19 இணைப்பு கல்லுாரி களில், வேளாண்மை, தோட்டக் கலை, இளநிலை தொழில்நுட்பம் என, 13 வகை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் சேர, முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன் 24ல் நிறைவடைந்தது.

‘நீட்’ தேர்வு முடிவுகளால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டு, ஆக., 28 முதல், 30 வரை நடந்தது. இதிலும், காலியிடங்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்ததால், செப்., 2 முதல், 4ம் தேதி வரை, கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது. ஆயினும், காலியிடங்கள் நிரம்பவில்லை.

தற்போது, 636 இடங்கள் காலியாக இருப்பதால், இன்று முதல், 13ம் தேதி வரை, இறுதிக்கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. காலை 8:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும் கலந்தாய்வில், பொதுப்பிரிவினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் பல்கலை டீன் மகிமைராஜா கூறுகையில்: “கவுன்சிலிங்கில் பங்கேற்க, 2,796 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘கட் – ஆப்’ மதிப்பெண்கள், 187 மற்றும் அதற்கு கீழ் பெற்ற மாணவர்கள் பங்கேற்கின்றனர். ”நாளை, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும், 13ம் தேதி, சிறப்பு பிரிவினருக்குமான கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்களுக்கு, கலந்தாய்வு குறித்த தகவல்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top